பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்லதுதானாம்... 'ஆழம் பார்க்கும்' அதிமுக எம்.எல்.ஏ
அதிமுக, வரும் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்லதுதானே என்று பளிச்சென, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோவை: மத்தியில் ஆளும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது நல்லதுதான் என்றும், தமிழகத்திற்கு அப்போதுதான் வளர்ச்சித்திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் நிகழாது என்றும் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல அணிகளாக உடைந்துபோனது. இதனால் எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் அதிமுகவினர் இருக்கும் நிலையில்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளது அதிமுகவினரிடையே ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கடந்த மாதம் கல்குவாரியில் இறந்த தொழிலாளர்கள் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும். பிரச்சனைக்குரிய குவாரியை மூடாவிட்டால் சசிகலா அணியில் இருந்து அணி மாறுவேன் என்று கூறி,பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
அரசியல் ஸ்டண்ட்
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று,அரசு சர்ச்சைக்குரிய கல்குவாரியை மூடியது. இதேபோல் கடந்த 11-ம் தேதி,திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கனகராஜும் போராடினார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைந்தால் எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்வேன் என்றார்.
பாதுகாப்பு
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனகராஜ் கூறுகையில், "கொடநாடு பங்களாவில் போதிய காவலர்கள் இல்லாததால் கொலை,கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கிய பங்களாவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும்.
இணைவோம்
ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஓ.பி.எஸ். அணியின் 2 கோரிக்கைகளும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம்.
கூட்டணி வைக்கலாம்
மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும். அந்த வகையில் பாஜகவோடும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துகொண்டால் நல்லது." என்று தெரிவித்தார்.