சென்னை அம்பத்தூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை… பதற்றம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: சென்னை அம்பத்தூரில் பட்டப்பகலில் அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குரு,52. இவர், சென்னை மாநகராட்சியின் 86-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மக்ரீன். இவர்களுக்கு ஆண்டோ என்ற மகனும், செஸி என்ற மகளும் உள்ளனர்.
கவுன்சிலர் குரு அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார். புதன்கிழமை பிற்பகல் 1மணியளவில் அளவில் குரு, தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் அவர் நடந்து சென்று கொண்டு இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மின்னல் வேகத்தில் கவுன்சிலர் குருவை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த குரு, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே அந்த கொலைவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
அம்பத்தூரில் பதற்றம்
குருவின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் பதறி அடித்து ஓடிவந்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்த குருவை மீட்டு திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குரு ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குருவின் உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட குருவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஜூலி' வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் குவிப்பு
சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்ணூர்பேட்டை பகுதியில் கூடுதல் போலீசார், குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜெயலலிதா இரங்கல்
குரு கொலை செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் நகர அண்ணா தொழிற்சங்க செயலாளரும், சென்னை மாநகராட்சி 86-வது வார்டு மாமன்ற உறுப்பினரான, அன்புச் சகோதரர் எம்.குரு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இந்தப்படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப கால கட்சி தொண்டரான குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.