தினகரன் அதிமுக அலுவலகம் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - வெற்றிவேல் எம்எல்ஏ
அதிமுகவை இணைக்கப் போவதே டிடிவி தினகரன்தான், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதே சசிகலாதான் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்ததே சசிகலாதான் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார். அதிமுக அலுவலகம் தங்களின் கட்சி அலுவலகம் என்றும் அங்கு தினகரன் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதித்திருந்தார் டிடிவி தினகரன். அதற்கான கெடு முடிந்து விட்டது. இந்த நிலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கள் பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், அணிகளை இணைக்க டிடிவி தினகரனால் மட்டுமே முடியும் என்று கூறினார்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் உள்ளனர், அது எங்க கட்சி அலுவலகம் நாங்கள் செல்லாமல் வேறு யார் செல்வார்கள் என்று கேட்டார்.
எடப்பாடி தலைமையிலான அரசை நாங்கள் ஆதரிக்கிறோம். அவரை முதல்வராக தேர்வு செய்ததே சசிகலாதான். அதை விடுத்து எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர் என்று ஜெயக்குமார் கூறுவது தவறு. கூவத்தூரில் தங்கியிருந்து சசிகலாதான் முதல்வரை தேர்வு செய்தார்.
அதிமுக இணைப்புக்காகவே டிடிவி தினகரன் தலைமை அலுவலகத்துக்கு செல்கிறார். எங்கள் அலுவலகத்திற்கு நாங்கள் செல்வதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்குமே உரிமை கிடையாது என்று கூறினார் வெற்றிவேல் எம்எல்ஏ.
டிடிவி தினகரன் இந்த தேதியில் போவார் என்று கூறவில்லை. ஆனால் நிச்சயம் செல்வார் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் வெற்றி வேல் கூறினார்.












Click it and Unblock the Notifications