சூடு பிடிக்கும் ஏற்காடு இடைத்தேர்தல்: எச்சரித்த உளவுத்துறை; வாக்காளர்களுக்கு கிடாக்கறி… பணப்பட்டுவடா
சென்னை: 'ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றிக்கான ஓட்டு வித்தியாசம் குறையும்' என, உளவுத் துறை போலீசார் எச்சரித்துள்ளதை அடுத்து அமைச்சர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பதவிக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், முக்கிய பிரமுகர்களை வளைத்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு, கிடாக்கறி, கறிவிருந்து, பணம் கொடுத்து கவர அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சூடுபிடிக்கும் பிரச்சாரம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4 ல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., சார்பில், சரோஜா, தி.மு.க., சார்பில், மாறன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் வாக்காளர்களை சந்தித்து போட்டி போட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் முகாம்
தி.மு.க.,வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, 33 அமைச்சர்களும் ஏற்காடு தொகுதியில் குவிந்துள்ளனர். அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஏற்காடு தொகுதியில், முகாமிட்டுள்ளனர்.

திமுகவிலும் சுறுசுறுப்பு
தி.மு.க., சார்பில், அனைத்து மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும், வெளியூர் ஆட்களை குவித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஏற்காடு தேர்தல் சூடுபிடித்துள்ளது.

கூடுதல் கவனம்
"ஒவ்வொரு அமைச்சரும், 5,000 ஓட்டுக்கு குறையாமல் பெற்றுத்தர வேண்டும்' என, தலைமை உத்தரவிட்டு உள்ளதால், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், ஓட்டு விகிதம் குறையும் பகுதி குறித்த விவரங்களை, உளவுத் துறையினரிடம் கேட்டு, அந்தப் பகுதியில், கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.

கொந்தளிக்கும் மக்கள்
ஏற்காடு எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள், தான் உயிருடன் இருந்த காலத்தில், தொகுதிக்கு சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. தொகுதியில், குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாதது, தொகுதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. அமைச்சர்கள் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், அவர்களுடன், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு வித்தியாசம்
அதிமுக ஆட்சிக்கு வந்து 2011ம் ஆண்டிற்குப் பின்னர் 3 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. திருச்சியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி திமுக வேட்பாளர் நேருவை 12.42% வாக்கு வித்தியத்தில் தோற்கடித்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி திமுக வேட்பாளர் சூர்யகுமாரை 43.04% வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல் புதுக்கோட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 49.8 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்றாலும் வாக்கு வித்தியாசம் குறையும்' என, உளவுத் துறை போலீசார் எச்சரித்துள்ளதை அடுத்து அமைச்சர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பதவிக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், முக்கிய பிரமுகர்களை வளைத்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திமுகவின் திருமங்கலம் "பார்முலா'
தி.மு.க., எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்தத் தேர்தலில், வெளி மாவட்ட ஆட்களை குவித்துள்ளது. அதோடு தினம் ஒரு புகாரை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர்.
அதோடு தி.மு.க.,வினர் கிடா விருந்து, வாக்காளர்களுக்கு, "கவனிப்பு' என, திருமங்கலம் பாணியை பின்பற்ற துவங்கி உள்ளனர். பண்ணை வீடு, தோட்டத்து வீடு, மலை கிராம கோவில்களில் கிடா விருந்து நடத்தி வருகின்றனர். விருந்துக்கு வரும் மக்களை, "கவனித்து' அனுப்புகின்றனர்.

20 இடங்களில் கிடா விருந்து
இதை முறியடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள திமுகவினர் திருமங்கலம் பார்முலாவை கையில எடுத்துள்ளனர். சேலம், உடையாப்பட்டியை அடுத்த குண்டுக்கல்லூரில், முன்னாள் சேர்மன் விஜயகுமார் தலைமையில், 200 பேருக்கு, கிடா விருந்து வைத்து, சாப்பிட்டவர்கள் கவனிக்கப்பட்டனர். இந்த தகவல், போலீசாருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தாமதமாக தெரிய வர, வருவாய்த் துறையினர், கேமரா சகிதமாக சென்று, கடைசி நேரத்தில், அவற்றை படம் பிடித்தனர். இதுபோல், 20 இடங்களில் ரகசிய கிடா விருந்து நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர்கள் முற்றுகை
திமுகவின் முக்கிய தலைவர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி வாக்காளர்களை சந்தித்து வருகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஜெ. பிரச்சாரம்
அதேபோல 60க்கும் மேற்பட்டவர்களை களத்தில் இறக்கியிருந்தாலும் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிமுகவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

நோட்டா ஒட்டு
ஏற்காடு இடைத்தேர்தலில் முதன்முறையாக நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் வாக்காளர்களுக்கு மிகமுக்கிய ஆயுதமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டா பட்டனை பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் ஆளும்கட்சியினரும், எதிர்கட்சியினரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications