போயஸ் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததால் மயங்கி விழுந்தார் ஜெயலலிதா: பி.ஹெச்.பாண்டியன் பகீர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா. கட்சியின் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான தலைவர்களை அவரை சந்தித்துவிட்டனர்.
சசிகலாவுக்கு எதிராகக் கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன், தம்பிதுரை போன்றோரும், சசிகலா தலைமையை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இதுவரையில் சசிகலாவை சந்திக்கவில்லை.

ஜெயலலிதா மரணமடைந்து முப்பது நாட்கள் வரையில் அமைதியாக இருப்பேன் எனத் தெரிவித்திருந்த பி.ஹெச்.பாண்டியன், 30 நாட்கள் முடிந்ததும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது சில உறுதிமொழியை எடுத்துக்கொண்டு யாரிடமும் பேசாமல் சொந்த ஊரான நெல்லை கிளம்பி சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து சசிகலா தரப்பில் பி.எச்.பாண்டியனுடன் சமரசப் பேச்சு நடந்து வருகிறது. தென்மண்டலத்தில் பிரபலமாக உள்ள முக்கிய தொழிலதிபர்தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும் இன்னும் பி.ஹெச்.பாண்டியன் சமாதானம் ஆகவில்லை என்றே தெரிகிறது. சசிகலா முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்திவரும் இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை 11 மணிக்கு சென்னையிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பி.ஹெச்.பாண்டியன்.

அவருடன் மனோஜ்பாண்டியனும் பிரஸ் மீட் செய்தார். பி.ஹெச்.பாண்டியன் கூறுகையில், "என்போன்ற மூத்த வழக்கறிஞர்கள் யாருமே நோயாளி மருத்துவமனைக்கு போகும் முன்பு என்ன நடந்திருக்கும் என்று யோசிப்போம். ஜெயலலிதா வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்து மன அழுத்தத்தால் கீழே விழுந்துள்ளார். தூக்கிவிடக் கூட ஆளில்லாமல் தவித்துள்ளார் ஜெயலலிதா. இந்த தகவல் மறுநாள் பத்திரிகைகளில் வந்தது. ஆனால் பேட்டியளித்தவர்களோ அம்மாவுக்கு ஒன்றுமே இல்லை என்றார்கள். நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். 2வது மாடியில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு அந்த தளத்தில் அதே வரிசையில் டாக்டர்களுக்கு என்று ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு டாக்டர்களிடம் விவரம் கேட்க முனைந்தேன். விவரம் சொல்ல யாருமே இல்லை.
ஆனால் ஜெயலலிதாவின் மெய்க் காப்பாளர்கள், அம்மா நலமாக இருக்கிறார், சீக்கிரம் வருவார் என்று கூறினர். அதை நம்பி வீடு திரும்பினேன். பல நாட்கள் நானும் அப்பல்லோ சென்றேன். அங்கே அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அமர்ந்து செய்திகளை பற்றி விவாதிப்போம். ஆனால் எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை என்றார் பி.ஹெச்.பாண்டியன்.












Click it and Unblock the Notifications