சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வது வெட்கக்கேடானது: 'நமது எம்ஜிஆர்' சாடல்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவிருப்பது வெட்கக்கேடானது என்று அதிமுக பத்திரிகையான நமதுஎம்ஜிஆர் சாடியுள்ளது.
இதுகுறித்து, நமது எம்ஜிஆர் முதல் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை செய்தி கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "சட்டத்தின்படி, புரட்சி தலைவி அம்மா, புடம்போட்ட தங்கமாக வெளியே வந்துள்ளார். அவருக்கு எதிரான சதிகளை முறியடித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று மேல்முறையீடு செய்து இதற்கு முன்பு வரலாறு கிடையாது. கர்நாடக அரசின் முடிவு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. 18 வருடமாக நடைபெற்ற ஒரு வழக்கில், வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு வெளியான பிறகு, மேல்முறையீடுக்கு செல்வது வெட்கக்கேடானது என்றும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
பிற மாநிலத்திற்கு மாற்றப்பட்ட எந்த ஒரு வழக்கிலும், இதுபோன்ற மேல்முறையீட்டு நடவடிக்கை இதற்கு முன்பு எப்போதும் எடுக்கப்பட்டதில்லை. இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை கர்நாடக அரசின் செயல்பாடு பாதிக்கச் செய்யும் என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக மற்றும் பாமக கட்சிகள், மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை தொடர்ந்து வற்புறுத்தியதற்காக அவர்களையும் சாடியுள்ளது நமது எம்ஜிஆர். தீயசக்திகள் கர்நாடக அரசு அப்பீலுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தின. அரசியலில் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாமல், இவ்வாறு அவை செயல்படுகின்றன. காவிரி விவகாரத்துக்காக காட்டாத அக்கறையை, இந்த விஷயத்துக்காக காண்பித்தன. இவ்வாறு நமது எம்ஜிஆர் கட்டுரை விரிவடைகிறது.