ஜெ.வுக்காக தீக்குளித்த கும்பகோணம் அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கும்பகோணம்: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் தீக்குளித்த அதிமுக பிரமுகர் மோகன்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 27 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், வேதனை அடைந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் மோகன்குமார், கடந்த 13ம் தேதி தனது உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு நாட்களாக தீக்காயத்தோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர் இன்று இரவு 7.45 மணிக்கு உயிரிழந்தார். கார்பண்டராக இருந்த மோகன்குமார் கும்பகோணம் அதிமுகவில் 23வது வார்டுக்கு வட்ட செயலாளராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராம ராமநாதனின் தீவிர விசுவாசியாகவும் இருந்துள்ளார்.