38 ஆண்டுக்குப் பின் அ.தி.மு.க. வசமான புதுவை ராஜ்யசபா சீட்! கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!!
புதுச்சேரி: 38 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி. சீட்டை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான கண்ணனின் பதவி காலம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் கோகுல கிருஷ்ணனும், மேலும் 4 பேர் சுயேட்சையாகவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணனின் வேட்புமனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற 4 சுயேச்சை வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து வேட்புமனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாளான 21-ந் தேதி இன்று முறைப்படி கோகுலகிருஷ்ணன் ராஜ்யசபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி மோகன் தாஸ் அறிவித்தார். இதன் மூலம் 38 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.