பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பவேண்டும்.. பொள்ளாச்சி ஜெயராமன் பகிரங்க அழைப்பு
பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வாருங்கள் ஒன்றுமையாக செயல்படுவோம் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கோவை: அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் எழுப்பிய கலகக்குரலால் அதிமுக இரண்டாக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.

இருப்பினும் தொண்டர்களின் மனநிலை சசிகலாவிற்கு எதிராக உள்ளது. எனவே சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாநகர மற்றும் புறநகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க., வை பிளவுபடுத்த திமுக சதி செய்து வருகிறது. பிரிந்து சென்றவர்கள் எல்லாம், எங்களுடன் மீண்டும் வந்து சேருங்கள். அதிமுகவை கட்சியை உடைய விடமாட்டோம்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா - ஜானகி என கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஆனால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டனர். அதேபோல் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும். வாருங்கள் ஒன்றுமையாக செயல்படுவோம் என்றார். இதன் மூலம் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.












Click it and Unblock the Notifications