ஏர்செல் வழக்கு: ப.சிதம்பரத்திடம் விசாரணையா? அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது அவரது நெருக்கடியால் ஏர்செல் நிறுவனப் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கை மாறின. இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டைரக்ட்ஸ் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று.
சிதம்பரத்தின் பங்கு என்ன?
மேலும், மேக்சிஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான மொரிஷியஸைச் சேர்ந்த குளோபல் கம்யூனிகேசன் சர்வீஸஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இந்தியாவில் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கு அனுமதி கோரியது. 600 கோடி ரூபாய்க்கு மிகையான அன்னிய முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுதான் அனுமதியளிக்க முடியும்.
ஆனால், மேக்சிஸ் நிறுவனத்தின் முதலீட்டுக்கு அப்போதைய நிதியமைச்சரான ப. சிதம்பரமே அனுமதியளித்திருக்கிறார். அவர் அனுமதி வழங்கியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
டெல்லி சிபிஐ நீதிமன்றம்
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் கடந்த விசாரணை செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற்றது.
சிதம்பரம் குறித்து விசாரணை
அப்போது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர் கோயல், மேக்சிஸின் ரூ600 கோடிக்கு அதிகமான முதலீட்டுக்கான அனுமதி கோப்பு அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, "அமைச்சர்' என்ற முறையில் அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்த பிறகே அவர் அனுமதி அளித்திருக்க வேண்டும். "அமைச்சருக்கான அதிகாரம்' இதைத்தான் தெளிவுபடுத்துகிறது. ஆனால், தனது பணியை சரிவர மேற்கொள்ளாமல் சிதம்பரம் தவறினாரா என்பது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சுவாமி மனு
இந்த நிலையில் "ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் விளக்கம் கேட்க வேண்டும்" என்று கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி.
|
அக் 16-ல் பதிலளிக்க உத்தரவு
சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளபடி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ளீர்களா? சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையை கவனத்தில் கொண்டு வரும் வியாழன்று (அக்டோபர் 16) பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு உத்தரவிட்டது.
சிதம்பரத்திடம் விசாரணை?
ஏற்கெனவே ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 13-ந் தேதிக்கு நடைபெற உள்ளது. தற்போது உச்சநீதிமன்றமும் வரும் 16-ந் தேதிக்குள் சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவது குறித்து பதிலளிக்க கூறியுள்ளது. இதனால் ப. சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.