"அம்மா.. டிக்கெட் விலை ஓவரா இருக்கு".. மதுரையிலிருந்து "வேதாளம்" ரசிகர்கள் குரல்!
மதுரை: மதுரையில் வேதாளம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அதிக அளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அஜீத் ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். விலையைக் குறைக்க முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்று கோரி போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டியுள்ளனர்.
அஜீத் நடித்த வேதாளம் படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வந்த இந்தப் படத்தை அஜீத் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதைப் பயன்படுத்தி தியேட்டர்காரர்கள் வழக்கம் போல காசு பறிக்கும் கொள்ளையர்களாக மாறியுள்ளனர். எல்லா ஊர் தியேட்டர்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் வாஷிங்டன் போய் விட்டு வந்தாலும் போஸ்டர், வாசப்படியில் மாடு படுத்துக் கிடந்தாலும் போஸ்டர் என்று போஸ்டருக்குப் பெயர் பெற்ற மதுரையில், இதற்கும் போஸ்டர் போட்டு அஜீத் ரசிகர்கள் அலம்பல் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், மாண்புமிகு அம்மாவுக்கு வேண்டுகோள். தல அஜீத்தின் 56வது படமான வேதாளம் திரைப்படத்திற்கு உங்கள் ஆட்சியில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 500க்கு விற்கப்படுகிறது. சொல்லி அடிக்கும் வல்லமை வாய்ந்த தமிழக முதல்வர் எங்கள் அம்மா அவர்களே, ஒரு டிக்கெட் விலை ரூபாய் 90க்கு தலை அஜீத்குமார் ரசிகர்களாகிய எங்களுக்குக் கிடைக்க மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டுகிறோம்.
என்று அந்த போஸ்டரில் போட்டுள்ளனர் அஜீத் ரசிகர்கள்.
ஊரெல்லாம் மழை பெய்யுது, வெள்ளம் ஓடுது, வீடெல்லாம் மூழ்கிப் போச்சு, பயிரெல்லாம் அழுகிப் போச்சு.. அஜீத் ரசிகர்களுக்கு வந்த கவலையைப் பாருங்களேன்!