50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளியில் தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட மு.க. அழகிரி
50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளியில் தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து மு.க. அழகிரி பகிர்ந்துகொண்டார்.
சென்னை: சென்னை சேத்துபட்டு எம்.சி.சி.பள்ளியில் 1967-ம் ஆண்டு படித்த மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு, தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் வசந்த காலம் எனலாம். 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கு தேடலாம்...' எனும் தங்கர் பச்சானின் 'பள்ளிக்கூடம்' படத்தில் வரும் இந்த வரிகளில் ஒளிந்து கிடப்பது, நம் ஒவ்வொருவரின் பள்ளி பருவ நினைவுகளும் தான்.
அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1967- ஆம் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர்.
இதற்காக ஆஸ்திரேலியா, லண்டன் உள்பட பல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் உள்பட 250 பேர் வந்திருந்தனர். இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான, மு.க.அழகிரி கலந்து கொண்டார். அப்போது பள்ளியில் படித்த போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.
பின்னர் பள்ளியை சுற்றிப்பார்த்து, ஓடியாடி விளையாடிய இடங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர். இதனிடையே தற்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை சந்தித்து மு.க. அழகிரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.