ஆதரவாளர்களுக்கு சீட்.. கருணாநிதியிடம் பட்டியல் கொடுத்த அழகிரி.. கலக்கத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள்
மதுரை: தமிழக சட்டசபை தேர்தலின்போது தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி, ஒரு பட்டியலை, திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியதையடுத்து திமுகவிற்குள் விரிசல் ஏற்பட்டது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அழகிரி திமுகவை விட்டு தற்காலிகமாகவும், பின்னர் நிரந்தரமாகவும் 2வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
இந்த நீக்கத்திற்கு பிறகும் சமீபத்தில் அழகிரி திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை கூறி வந்தார். அப்போது அழகிரிக்கும், திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அவரை பொருட்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

அழகிரி அவசியம்
இந்நிலையில் விஜயகாந்த் இணைந்ததால் மக்கள் நல கூட்டணி வலிமை பெற்றுள்ளது. இதையடுத்து அழகிரி தயவு திமுகவுக்கு தேவை என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் கடந்த வாரம் நடந்தது.

சந்திப்பு
கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியோடு நீண்ட நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவரும், தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்துள்ளனர். பிரதி உபகாரமாக, தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க அழகிரி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

ஸ்டாலின் எரிச்சல்
அதேநேரம், ஸ்டாலினுக்கு இவ்விருவர் சந்திப்பில் உவப்பு இல்லை என்பது அவர் அளித்த பேட்டியில் இருந்து தெரிய வந்தது. "அழகிரி அவரது அம்மா-அப்பாவை சந்திக்க வந்ததாக கேள்விப்பட்டேன்.., அதில் அரசியல் இல்லை"என்று மட்டம் தட்டும் வகையில் பேட்டியளித்தார் ஸ்டாலின்.

நேர்காணல் முடிந்துவிட்டதே
ஆனால், அழகிரி ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தர கருணாநிதி சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நேர்க்காணல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையிலும், அழகிரிக்காக, கருணாநிதி இறங்கி வந்துள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

பெண்கள் தேவை
தென் மாவட்டங்களில், புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் திமுக சார்பில் போட்டியிட அதிக வாய்ப்பு தர வேண்டும் என்று அழகிரி, தனது தந்தையிடம் கூறியுள்ளாராம். இப்படி செய்தால், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக முற்றாக கொடி நாட்ட நிறைய வாய்ப்புள்ளதாக அழகிரி தனக்கு கிடைத்த தகவல்களை கருணாநிதியிடம் கூறினாராம்.

மாஜிக்களுக்கு கல்தா
முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு தந்து பெயரை கெடுப்பதை விட, கட்சிக்காக நீண்ட காலம் உழைத்துவரும் பெண்களுக்கு வாய்ப்பு தர அழகிரி கேட்டுக்கொண்டுள்ளாராம்.

திருமங்கலம் பார்முலா?
மேலும், இந்த தேர்தலில் வாக்காளர்களிடம் பணத்தை கொண்டு சேர்ப்பதற்காக சில 'வியூகங்களை' அழகிரி எடுத்துரைத்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூத் மட்டத்திலுள்ள நிர்வாகிகள் வாக்காளர்களை நாட வேண்டியதன் அவசியத்தை அழகிரி எடுத்துரைத்துள்ளார்.

சீட் கொடுங்க
மேலும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் பட்டியலை கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கருணாநிதிக்கு அழகிரி அன்பு கட்டளை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகோ பிரச்சினையில்லை
தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுகவிற்குள் பூசல் இருப்பதை சுட்டிக்காட்டிய அழகிரி, வைகோவால் திமுகவுக்கு பாதிப்பு வராது எனவும், திமுக இறங்கி வேலை செய்தால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை கொத்தாக அள்ளலாம் என்றும் ஐடியா கூறியுள்ளாராம்.

அழகிரி மீது நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலின்போது ஸ்டாலின் வியூகங்கள் படி தேர்தலை சந்தித்தபோதும் திமுக படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம், அழகிரி தென் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியில் இருந்தபோது நடந்த திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்றது. எனவே அழகிரி வியூகங்களுக்கு கருணாநிதி தலையாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் கிலி
அழகிரி கொடுத்துள்ள விருப்ப வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள பெயர்களில் பலவற்றை தென் மாவட்ட தொகுதிகளுக்காக பரிசீலிக்க வேண்டிதான் கொடுத்துள்ளார். எனவே அழகிரியை எதிர்த்துவிட்டு, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்த தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. அழகிரி கை ஓங்கினால் தங்கள் பாடு திண்டாட்டம்தான் என்கிறார்கள் அவர்கள்.

ஸ்டாலினுக்கும் பின்னடைவு
தென் மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுத்து அழகிரியை முற்றிலுமாக ஆதரவற்ற நிலையில் வைத்திருக்க நினைத்த ஸ்டாலினுக்கும் அழகிரியின் பட்டியல் கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications