ஜல்லிக்கட்டு… சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆன #alanganallur
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் இன்று ‘அலங்காநல்லூர்’ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அலங்காநல்லூர் ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் கொந்தளித்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து, தென்மாவட்டங்களில் வெறும் 13 இடங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு தற்பொது 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் இருக்க போலீசார் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதையும் தாண்டி இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அலங்காநல்லூரில் போராட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆனாலும் தொடர்ந்து அலங்காநல்லூர் போராட்ட பூமியாகவே இன்று மாறியுள்ளது. மேலும், திரைப்பட இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா உள்ளிட்ட பிரபலங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், அலங்காநல்லூர் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. #அலங்காநல்லூர் என்று தமிழ் மற்றும் #alanganallur என்று ஆங்கிலம் ஹேஷ்டேக் மூலம் ஆயிரக்கணக்கான கருத்துப்பதிவுகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.