அட காலக்கொடுமையே... மதுபான விலை உயர்வை கண்டித்து ஆரணி அருகே 'குடிமகன்கள்' போராட்டம்!
மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆரணி அருகே குடிமகன்கள் டாஸ்மாக் கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை : ஆரணியை அடுத்த மாமண்டூரில் மதுபானங்களின் விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் டாஸ்மாக் கடையை மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக்கின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை அதிகரிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி பீருக்கு 10 ரூபாயும், குவார்ட்டருக்கு 12 ருபாயும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமண்டூரில் மதுபானங்களின் விலை உயர்வை கண்டித்து மதுப்பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
'உயர்த்தாதே உயர்த்தாதே மது விலையை உயர்த்தாதே' என்றும் குடிமகன்கள் கோஷமிட்டனர். ஏற்கனவே டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானங்கள் மீது ரூ. 5 முதல் ரூ. 10 வரை விலையை உயர்த்தி விற்பனை செய்யும் நிலையில் அரசும் தற்போது விலையை உயர்த்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.