மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. ஓபிஎஸ், தம்பிதுரை பங்கேற்பு! முக்கிய முடிவுகள் அறிவிப்பு?
அதிமுக எம்..எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசரக்கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது. அதில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நடைபெற இருந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் ரோடு சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அடுத்தடுத்து மருத்துவமனை தெரிவித்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரமாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர், ஜெயலலிதா தவிர்த்து அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் யாரும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே மதியம் 3 மணிக்கு மேல் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் ஜெயலலிதா உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக கூறி தகவல் வெளியிட்டனர். இந்த நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தற்போது கூடியுள்ளனர்.
அவைத்தலைவர் மதுசூதன் தலைமையில் நடைபெறும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக 5.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனையடுத்து அது தவறான தகவல் என்று சில நிமிடங்களில் செய்தி வெளியாகவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications