நீட் மருத்துவத்திற்கு மட்டுமல்ல, அனைத்து கல்விக்கும் வரும்- எச்சரிக்கும் திருமாவளவன்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் நாடகத்தை அம்பலப்படுத்துவோம் என்று று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வு மருத்துவ கல்விக்கு மட்டுமல்ல அனைத்து கல்விக்கும் அமல்படுத்தப்பட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
தடை விதிக்கப்பட்ட நிலையில் கூடியிருக்கிறோம். தடையை கண்டு தமிழர்கள் அஞ்சமாட்டோம் என்பதை உணர்த்தவே கூடியுள்ளோம். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றார் திருமாவளவன்.
கல்வி உரிமை மாநில அரசுக்குதான் உள்ளது. இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வை நடத்த ஏன் முடிவு செய்தனர்?.
இந்தியாவில் சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், ஐசிஎஸ்இ பாடத் திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
கல்விக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஓரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வராமல் ஒரே மாதிரியான தேர்வு எப்படி சாத்தியம்.
மத்தியஅரசு துரோகம் செய்து விட்டது என்று கூறக்கூடிய தெம்பு மாநில அரசுகளுக்கு இல்லை. நீட் மருத்துவத்திற்கு மட்டுமல்ல அனைத்து கல்விக்கும் வரும். இதன் மூலம் மனுதர்ம சட்டத்தை நடைமுறை படுத்த முயற்சி செய்கிறது.
மனுதர்மத்தை எதிர்த்து சமூக நீதியை பாதுகாக்கிற போராட்டத்தை திமுக நடத்தும். இது அனிதாவிற்கு இரங்கல் கூட்டமல்ல மனுதர்மத்தை எதிர்த்து நடத்துகிற யுத்தம்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசு இணைந்து நடத்துகிற நாடகத்தை அம்பல படுத்துவோம் என்றும் திருமாவளவன் கூறினார்.