காவிரி: சென்னையில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது விடுதலை செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
போராட்டம்
இந்த கூட்டம் நடைபெற்ற உடன் திடீரென ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைவர்கள்
அப்போது மத்திய அரசை ராஜினாமா செய்ய கோரும் பதாகைகள் ஏந்தி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திருநாவுக்கரசர், ராமசாமி, திருமாவளவன், கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திடீர் சாலை மறியல்
அப்போது காவல் துறை இணை ஆணையர் அன்பு சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடரும்
இதைத் தொடர்ந்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், வீரமணி, ஜவாஹிருல்லா முத்தரசன், உதயநிதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீஸார் விடுதலை செய்தனர். கைது செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.