திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் கண்துடைப்பு நாடகம்... அமைச்சர் செல்லூர் ராஜு
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதன் மூலம் திமுக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை: விவசாயிகளுக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதன் மூலம் திமுக கண் துடைப்பு நாடக்ததை நடத்துகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் மத்திய அரசு அசரவே இல்லை. அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை.
34-ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரிகளும் கலந்து கொண்டன.
இதில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இந்த கூட்டம் குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகும். இன்னும் சொல்லபோனால் விவசாயிகளின் பிரச்சினைக்கு திமுகவினரே காரணமாவர். அதற்கு எடுத்துக்காட்டு உரங்களின் விலையை உயர்த்தியது ஆகும். அவர்கள் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications