தண்ணீர் திரை... காற்று திரை... சென்னையில் களைகட்டும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு...
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சென்னை நகரம் அழகு படுத்தப்பட்டு வருகிறது. கட்சிக்கொடிகள், பேனர்கள் என களை கட்டியுள்ளது சென்னை மாநகரம். கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே காமராஜர் சிலையின் பின்புறம் தமிழக அரசின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து வீடியோ காட்சியாக ஒளிபரப்பு செய்யும் வகையில் அரை வட்ட வடிவில் பிரமாண்டமான புரெஜக்டர் டூம் அமைக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள் தலைநகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில் சென்னை கடற்கரையில் இருந்து விமானநிலையம் வரை சாலைகள் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.
மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கத்தில் 5 ஆயிரம் வாகனங்களை நிறுத்த பிரம்மாண்டமான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகரை அழகுப்படுத்தும் பணிகள், வரவேற்பு நடவடிக்கைகள் என சென்னை நகரமே களை கட்ட தொடங்கியுள்ளது.
அதிமுக கொடி பேனர்கள்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 9,10ம் தேதி 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரவேற்பு பதாகைகள், கண்ணை கவரும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளிலும், மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான வழி நெடுக அதிமுக கொடி மற்றும் பேனர்களாக காட்சியளிக்கிறது.
சென்னை விமான நிலையத்தில்
உலக அளவில், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முதலீ்ட்டாளர்கள் வருகை புரியம் முதல் இடம் சென்னை விமான நிலையம் என்பதால் அதனை அழகுப்படுத்தும் பணிகளும் மெருகேற்றும் பணிகளும் வேக, வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு தமிழக கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணம், நமது தேசத்தின் சிறப்புகளை அளிவிக்கும் வகையிலும் சிற்பங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அழகுபடுத்தும் பணி
சென்னை விமான நிலையத்தைப் பொருத்தவரை உள்நாட்டு, வெளிநாட்டு மையப் பகுதிகளில் பூம்புகார் நிறுவனத்தால் தமிழக பாரம்பரிய கலாச்சாரத்துடன் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு, நடராஜர் சிலை, காவிரித் தாய்சிலை, மர சிற்பங்கள், பஞ்சலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், செட்டிநாட்டு தூண்கள், கற்சிலைகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
கலைப்பொருட்கள்
நகரின் முக்கிய இடங்களான துறைமுகம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்கா, சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தமிழக பாரம்பரிய கலைப் பொருட்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரம்மாண்ட டூம்
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சிலையின் பின்புறம் தமிழகத்தின் புராதன சின்னங்கள், முக்கியமான சுற்றுலா தலங்கள், தமிழக அரசின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து வீடியோ காட்சியாக ஒளிபரப்பு செய்யும் வகையில் அரை வட்ட வடிவில் பிரமாண்டமான புரெஜக்டர் டூம் அமைக்கப்பட்டு உள்ளது.
தண்ணீரும் காற்றும்
அடிப்பகுதி தண்ணீர் நிரப்பப்பட்டும், அதற்கு மேல் உள்ள பகுதிகள் காற்று நிரப்பப்பட்ட தூண்களின் உதவியோடு 60 அடி வட்ட பரப்பளவில் 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உள்ளே 6 புரெஜக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒரே சமயத்தில் படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.இதனை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இரவில் ஒளிபரப்பு
பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக உள்ளே குளு,குளு வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியில் இருந்தபடியும் காட்சிகளை பார்வையிடலாம். இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
பெசன்ட் நகர் கடற்கரை
இதனை கடற்கரைக்கு வருபவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். 10ம்தேதி வரை இந்த புரெஜக்டர் டூம் மெரினா கடற்கரையில் இருக்கும். அதற்கு பின்னர் 11 மற்றும் 12ம்தேதிகளில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மீன் மார்க்கெட் அருகே மாற்றம் செய்யப்பட உள்ளது.
தண்ணீர் திரையில் காட்சி
அடையாறு திரு.வி.க பாலம் அருகே தெற்கு கெனால் சாலை ஆற்று மையப்பகுதியில் ‘வாட்டர் ஸ்கிரீன்' என்ற தண்ணீர் திரையில் காட்சிகள் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதற்காக ஆற்றில் உள்ள தண்ணீரை அதிக குதிரை திறன் கொண்ட நவீன மோட்டார் பம்புகள் மூலமாக உறிஞ்சப்பட்டு, தண்ணீர் திரை அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் தொழில் நுட்பத்தில்
இருள் சூழ்ந்த நேரத்தில் மட்டுமே காட்சிகள் தெளிவாக தெரியும் என்பதால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை வீடியோ காட்சிகள் புரெஜக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சிங்கப்பூர் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் தண்ணீர் திரை ஏற்படுத்தி, வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கண்டு ரசிக்க
பொதுமக்கள் இதனை கண்டு களிக்கும் வகையில் பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை வழியாக பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆகாயத்தில் தண்ணீர் திரை
ஆகாயத்தில் தண்ணீரால் அமைக்கப்பட்ட திரையில் படக்காட்சிகள் தெரிந்தது, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஏற்பாடு நேற்று ஒத்திகை நிகழ்வாக மட்டுமே நடந்தது. இன்று முதல் 10ந்தேதி வரை தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 4 நிமிடம் ஓடும் தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ 4 முறையும், கண்ணைக்கவரும் லேசர் ஒலி-ஒளி காட்சிகளும் தண்ணீர் திரையில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காணும் இடமெங்கும்
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக செய்யப்படும் அலங்காரங்கள் ஒருபக்கம் பாராட்டை பெற்றாலும் மறு பக்கம் எதிர்கட்சிகள் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நத்தம்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக கொடிகளும், முதல்வரை வரவேற்று பேனர்களுமாக காட்சியளிக்கிறது.
கட்சிக்கொடி பேனர்கள்
சாலையின் மத்தியில் உள்ள சென்டர் மீடியனும் விட்டு வைக்கவில்லை. அங்கும் முதல்வரை வரவேற்று அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்தில் இருபுறம் மற்றும் சென்டர் மீடியனில் ஒரு அடிக்கு ஒரு கட்சி கொடி என்ற விதத்தில் பாலம் முழுவதும் ஆக்கிரமித்து அதிமுக கொடிகளாக காட்சியளிக்கிறது. மெட்ரோ ரயில் மேம்பால தூண்களிலும் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.
ரூ.100 கோடி செலவு
சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர பூங்கா, நுங்கம்பாக்கத்தில் உள்ள சுதந்திர தின பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்காக்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறிய வகையிலான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக ரூ. 100 கோடி செலவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த பணம் முழுவதும் விளம்பரத்துக்கே செலவாகி விடும் போல தோன்றுகிறது. மக்கள் பணம் இப்படி வீணாகிறதே என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டும், கொந்தளித்தும் வருகின்றனர்.