உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி? - டுவிட்டரில் பதிவிட்ட ஓபிஎஸ்
உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓபிஎஸ் தனது அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தமிழக நலன் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று நேற்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு பிரதமர் கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
|
பிரதமருடன் சந்திப்பு
சென்னை திரும்பிய ஓபிஎஸ் பிரதமர் உடனான சந்திப்பு பற்றி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
|
பாஜக உடன் கூட்டணியா?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
|
தேதி அறிவித்த பின்னர் முடிவு
அதே நேரத்தில் தனது அடுத்த பதிவில் உள்ளாட்சி தேர்தல் பற்றி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
என்ன சொல்வார் ஓபிஎஸ்
இதன்மூலம் நேற்றைய சந்திப்பில் அவர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசியிருப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.