பஸ் ஸ்டிரைக் கிடக்குது... தமிழகத்திற்கு 'எக்ஸ்ட்ரா கரண்ட்' கேட்கும் ஓ.பி.எஸ்.!
சென்னை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் அதைத் தீர்க்க அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கிறதா என்று சரிவரத் தெரியாத நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது வேலையில் கவனமாக இருக்கிறார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கக் கோரி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தியான 150 மெகாவாட் மின்சாரத்தில் அதிமுக தலைமையிலான அரசு எடுத்த முழு முயற்சியின் காரணமாக 100 மெகாவாட் மின்சாரம் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, தற்போது இரண்டாவது உலையில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 50 மெகாவாட் மின்சாரம் தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே, இன்னமும் ஒதுக்கப்படாமல் இருக்கும் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே வேளையில், அணு மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியிருந்ததையும் இங்கே நினைவுகூறுகிறேன்.
இந்த விவகாரத்தில் தாங்கள் மத்திய மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2வது உலையில் உற்பத்தியாகும் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.