ஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது சரியான நடவடிக்கை- காங், இடதுசாரிகள் வரவேற்பு!
சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்றுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்டவை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், ஆளுநரின் அறிவிப்பில் சர்ச்சையை கிளப்புவது சரியில்லை. சுப்பிரமணியன்சுவாமி பல குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பிரதமர் மோடியும் கண்டிக்கவில்லை. 2 முறை முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சரியானது என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அரசுப் பணிகள் தொய்வின்றி நடக்கவே ஆளுநர் அறிவித்துள்ளார். பல கட்சிகள் கூறிய கருத்துக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், அரசு இயங்க வேண்டும் என்பதற்காக நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications