ம.தி.மு.க, இடதுசாரிகள், வி.சி.க. உட்பட 6 கட்சிகள் இணைந்து கூட்டு இயக்கம்.... உதயமாகிறது 3வது அணி?
சென்னை: மக்கள் பிரச்சினையில் இணைந்து செயல்பட இருப்பதாக ம.தி.மு.க, பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். வரும் 13-ந்தேதி 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் இணைந்து செயல்படும் வகையில் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டு இயக்கம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவர் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த கூட்டு இயக்கத்திற்கான முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாருல்லா, காந்திய மக்கள் இயக்க பொருளாளர் குமரய்யா ஆகிய 6 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி, ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் இணைந்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். வரும் காலங்களில் நாங்கள் கூட்டு இயக்கமாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட இருக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல இருக்கிறோம்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விசாரணையை சந்திக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தை தொழிலாளர் நல சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்கள் பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும், என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 13-ந்தேதி கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த இருக்கிறோம். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 6 கட்சிகளின் சார்பில் சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், யாகூப் மேமன் தூக்கு தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து செப்டம்பர் 2-ந் தேதி நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம், ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3வது அணி உதயம்?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம்பெறலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க. அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளோ இடதுசாரிகளுடன் கை கோர்க்க ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் 6 கட்சிகள் இணைந்து கூட்டு இயக்கத்தைத் தொடங்கியிருப்பது சட்டசபை தேர்தலுக்கான 3வது அணியாக மாறுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.