'அமைதிக்கு பெயர் தான் சாந்தி'.. சேலம் பெண்கள் சிறையில் ஒலித்த பாடல்.. அதிர்ந்து போன அதிகாரிகள்
சேலம்: சேலம் மத்திய சிறையில் பெண்கள் பிரிவு ஜெயிலுக்குள் 'எப்.எம்.' ரேடியோவை பொருத்தி வார்டன்கள் பாடல் கேட்டுள்ளனர். 'அமைதிக்கு பெயர் தான் சாந்தி' என்று பாடல் கேட்டிருக்கிறது, இதை கேட்டு திடுக்கிட்ட சேலம் மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இச்சிறைச்சாலை மொத்தம் 1432 தனி அறைகளைக் கொண்டுள்ளது. இங்கு 700 கைதிகளைச் சிறை வைக்கக்கூடிய இட வசதி இருக்கிறது. இங்கு ஏராளமான தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறைக்கு எதிரில் பெண் குற்றவாளிகளுக்கு என தனி சிறை உள்ளது. இந்த சிறையில் 50-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சிறையில் உள்ள பெண் வார்டன்கள் அவ்வப்போது கைதிகளிடம் செல்போன் உள்ளதா என அடிக்கடி கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் நேற்று முன்தினம் பெண்கள் சிறைக்கு சென்று திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது, அமைதிக்கு பெயர் தான் சாந்தி ! என்ற சினிமா பாடல் ஒலித்திருக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சிறைக்குள் 'எப்.எம்.' ரேடியோவை பொருத்தி பாடல் கேட்டு வந்ததை கண்டுபிடித்தார்.
இவ்வளவு நாட்களும் சிறையில் 'எப்.எம்.'ரேடியோ இல்லையே? தற்போது எப்படி வந்தது? என்று பெண் சிறை வார்டன்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது சிறை வார்டன்கள் கூறும் போது, கைதி ஒருவர் 'எப்.எம்.'ரேடியோவை வாங்கி கொடுத்ததாகவும், அதை சிறைக்குள் வைத்து பாடல் கேட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும், சிறைக்குள் அனுமதி இல்லாமல் 'எப்.எம்.'ரேடியோவை பொருத்தி பாடல் கேட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பணியில் இருந்த வார்டன்களுக்கு சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் சேலம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஆண்கள் சிறையில் வேறு சம்பவம்: சேலம் மத்திய சிறையில், கைதிகள் சாராய ஊறல்களை தயாரித்து பூமியில் புதைத்து வைத்ததாகவும், அவை கண்டுபிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தான் சாராயம் காய்ச்சியதாக புகார் எழுந்தது.
சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்ததாக பிரபு குற்றம்சாட்டினார். சாப்பிட மறுத்து போராட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications