'நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறை' - அமீர் விமர்சனம்
அமீருக்கும் அவர் சகாக்களுக்கும் ஐடி இளைஞர்கள் மீது ஏன் இத்தனை கடும் கோபம் என்று தெரியவில்லை. சமீபத்தில் நடந்த திலகர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஐடி இளைஞர்களை பொத்தாம் பொதுவாக இப்படிச் சொன்னார்:
"தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது."
-எல்லா ஐடி இளைஞர்களும் அப்படி அல்ல என்ற அடிப்படை உண்மை அவருக்கு தெரியவில்லை. இருக்கட்டும்... அந்த விழாவில் அவர் பேசியதிலிருந்து...
"இந்தப் படத்தில் யாரையும் எனக்குத் தெரியாது. இருந்தும் வந்திருக்கிறேன்.நான் இங்கு வர இரண்டு காரணங்கள். ஒன்று சுரேஷ் காமாட்சி. அவர்தான் அழைப்பிதழ் கொடுக்க வந்தார்.
இன்னொரு காரணம் கலைப்புலி தாணு சார். ஒரு காலத்தில் ஃபெப்ஸி க்காக ஒரு பிரச்சினையில் எங்கள் இருவருக்கும் இணக்கமில்லாமல் இருந்தது. விழாக்களில் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் குறுக்கிட்டுக் கொண்டு கடந்து போவோம். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் நண்பர்களாகி. விட்டோம். இப்போது எங்களை யாரும் பிரிக்கமுடியாத அளவுக்கு நண்பர்களாகிவிட்டோம்.
எனக்கும் நீது சந்திராவுக்கும் 'யுத்தம்செய்' படத்தில் பாடலில் நடித்த பிறகு 4 வருடமாக நல்ல நட்பு நிலவுகிறது. அவரும் அழைத்தார். முன்பே வந்து விட்டால் அவருக்காகத்தான் அமீர் வந்தார் என்பார்கள். எனவே காருக்குள் காத்திருந்தேன், கருபழனியப்பன் வரும்வரை.
நான் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தாமதமாகப் போவேன். காரணம் ஃபெப்ஸி சங்கச் செயல்பாடுகள். இப்போது அதில் இல்லை.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது 'திலகர்' என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. 'திலகர்' என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.
எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார் கட்டை பஞ்சாயத்து செய்வார்.
இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.
தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும்.
தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது:
எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன் படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டு கோளாகவே வைக்கிறேன்,'' என்றார் அமீர்.
திலகர் படத்தை பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. துருவா என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜி பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளார்.
இயக்குநர்கள் மனோஜ்குமார், சீனுராமசாமி, கரு. பழனியப்பன், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நீது சந்திரா, நமிதா, இனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.