அமித்ஷா சென்னை வரும் முன்பே ம.ந.கூவுடன் அவசரமாக கைகோர்த்த விஜயகாந்த்!
சென்னை: சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.
மத்திய அமைச்சர் ஜாவேத்கர் தன்னை விரட்டி விரட்டி மடக்கி சந்திக்க வந்தது மாதிரி அமித் ஷாவும் தன்னை சந்திக்க வந்துவிடுவாரோ என்ற கலக்கத்தில் இருந்த விஜய்காந்த், அவர் சென்னை வருவதற்கு அவசர அவசரமாக மக்கள் நலக் கூட்டணியினரை காலையிலேயே அழைத்து அதில் இணைந்தும் விட்டார்.
இதனால் இந்த பயணத்தின் போது அமித்ஷா விஜயகாந்த்தை சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆனாலும் சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று தமிழக பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி வருகிறார். ஆனால் பாமகவோ, அன்புமணி ராமதாஸை முதல்வராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி எனக் கூறியிருந்தது.
பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இத்தகைய களேபரமான நிலையில் அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளார். அவர் சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக நிர்வாகிகளுடானான ஆலோசனைக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெறும் கேரளாவுக்கு அமித்ஷா புறப்பட்டுச் செல்கிறார். இதனுடையே தாம் மீண்டும் சென்னைக்கு இந்த வாரம் வர இருப்பதாக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
தேமுதிக கைநழுவிப் போய்விட்டதால் பாமகவை எப்படியாவது இழுக்க பாஜக முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.