12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் சாதிக்க வாழ்த்துக்கள்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: படித்தால் அனைத்து மாணவ, மாணவியருக்கும் நிச்சயம் எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்புத் தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்துகிறேன் என்று பாமக இளைஞரணி தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (04.03.2016) வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மொத்தம் 2421 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ, மாணவியர் இந்த தேர்வுகளில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட 56,085 மாணவர்கள் கூடுதலாக இந்தத் தேர்வுகளில் பங்கேற்பதும், சென்னை புழல், திருச்சி, பாளை சிறைகளில் 106 சிறைவாசிகள் இத்தேர்வை எழுதுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.
மாணவர்களின் வாழ்வில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஒரு மாணவர் எதிர்காலத்தில் என்னவாக மாறப்போகிறார் என்பதை 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். இதை உணர்ந்து மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.
ஒரு பாடத் தேர்வுக்கும், அடுத்த பாடத்தேர்வுக்கும் இடையில் போதிய அளவு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் சிறப்பாக தயாராக வேண்டும். தேர்வுக்காக படிக்கும் போதும், தேர்வு எழுதும் போதும் பதற்றத்தை தவிர்த்து, கவனத்தை அதிகரிக்க வேண்டும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.
அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
பனிரெண்டாம் வகுப்பு படித்து கல்லூரி படிப்பையும் முடித்தால் கூட வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லையே என்ற கவலையும், ஐயமும் கல்வி மீதான மாணவர்களின் ஆர்வத்தை குறைப்பதை நான் நன்றாக அறிவேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்துள்ளது.
பா.ம.க. ஆட்சியில் பள்ளி இறுதி வகுப்புகளில் தொடங்கி கல்லூரி வரை திறன் சார் கல்வி முறையை அறிமுகம் செய்து, படித்த மாணவர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதே இதன் நோக்கம் ஆகும். எனவே, படித்தால் அனைத்து மாணவ, மாணவியருக்கும் நிச்சயம் எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்புத் தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.