தென் மாநிலங்கள் முழுமைக்கும் சப்ளை செய்ய திட்டம்! 3000 லிங்கா சிடிகள் பறிமுதல்
ஹைதராபாத்: லிங்கா திரைப்படத்தின் திருட்டு விசிடிகள் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மையத்தில் அதிரடி சோதனை நடத்தி லிங்கா படத்தின் 3 ஆயிரம் சிடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நேற்று திரைக்கு வந்த பிரமாண்ட திரைப்படம் லிங்கா. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வினுகொன்டா என்ற ஊரில் திருட்டி சிடி தயாரிக்கப்படுவதாக உள்ளூர் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்தின்பேரில், கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு பல மொழிகளின் புதுப்படங்களின் சிடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படங்கள் அங்கு சுட சுட பிரிண்ட் செய்யப்பட்டு வந்தது. மொத்தம் 45 ஆயிரம் திருட்டு சிடிகள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் லிங்கா திரைப்படத்தின் 3 ஆயிரம் சிடிகளும் அடங்கும். லிங்கா சிடிகளை இங்குதான் தயாரித்து தென் இந்தியா முழுமைக்கும் சப்ளை செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 15 கம்ப்யூட்டர்கள், மற்றும் சிடிகளை பறிமுதல் செய்த போலீசார், சிடி தயாரித்த நபரையும் கைது செய்தனர்.