புயல் எச்சரிக்கை... அண்ணா பல்கலை., சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்.கழக தேர்வுகள் ரத்து
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால், இன்று காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அறிவித்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்
புயல் எச்சரிக்கையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற இருந்த பொறியியல் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெற உள்ள மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்த பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கடலூர், நாகை
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலைக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திலும் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக் கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை இல்லை
புதுச்சேரியில் நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை எனவும், வழக்கம் போல் இயங்கும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.