3 சென்ட் நிலம் பாருங்கண்ணா! நாமே வாங்கிக் கொடுத்திடலாம்! பாஜக நிர்வாகியை திகைக்க வைத்த அண்ணாமலை!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பாஜக நிர்வாகியின் வாடகை வீட்டுக்கு சென்ற அண்ணாமலை, அவரது ஏழ்மை நிலையை பார்த்து சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள 3 சென்ட் நிலம் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், அருகில் இருந்த பாஜக முக்கிய பிரமுகரிடம் நிலம் பார்ப்பதற்கான பொறுப்பை நீங்க ஏற்றுக்கொள்ளுங்க, நிலத்தை தேர்வு செய்த பிறகு சொல்லுங்க வாங்கிக் கொடுத்துவிடுவோம் என அண்ணாமலை தெரிவித்தார். இதைக்கேட்ட பாஜக நிர்வாகி முருகன் அண்ணாமலை காலில் விழுந்து நன்றி சொல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அண்ணாமலை, அதெல்லாம் கூடாது என்றார்.

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராமேஸ்வரம் நகர பாஜக நிர்வாகி முருகன் இல்லத்துக்கு அமித்ஷாவை அண்ணாமலை அழைத்து செல்வது போன்ற திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேரமின்மை காரணமாக கோவில் விசிட்டை தொடர்ந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார் அமித் ஷா. இதனால் பாஜக நிர்வாகி முருகன் வீட்டுக்கு அண்ணாமலை மட்டும் கட்சியினருடன் சென்று தேநீர் அருந்தினார். அப்போது முருகனின் ஏழ்மை நிலை குறித்து அறிந்த அண்ணாமலை, வாடகை வீட்டில் வசித்து வருவது பற்றியும் கேட்டறிந்தார்.

இதையடுத்து ஆன் தி ஸ்பாட்டிலேயே பக்கத்தில் நின்ற பாஜக முக்கிய பிரமுகரிடம், 3 சென்ட் நிலம் பாருங்கண்ணா, நிலத்தை முருகனுக்கு நாமே வாங்கிக் கொடுத்துவிடுவோம் என அண்ணாமலை கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாஜக நிர்வாகி முருகன், திக்குமுக்காடி விட்டார். தன்னை விட அண்ணாமலை வயதில் குறைந்தவர் என்றாலும் நன்றி சொல்வதற்காக காலில் விழ முயன்றார்.
நடைபயணம் தொடங்கிய முதல் நாளே பாஜக நிர்வாகிக்கு 3 செண்ட் நிலம் வாங்கிக் கொடுப்பதாக சர்ப்ரைஸ் அளித்து சொந்தக்கட்சியினர் மத்தியில் தனது இமேஜை உயர்த்தியிருக்கிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications