அண்ணாமலை யாத்திரை 'ஓஹோவென’ நடக்கனும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோவிலில் வானதி சீனிவாசன் பிரார்த்தனை!
ராமேஸ்வரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை வெற்றி பெற வேண்டும் என ராமேஸ்வரம் திருக்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று வழிபாடு நடத்தினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை புறப்படுகிறார். ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பாஜகவினர் ராமேஸ்வரம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 168 நாட்கள் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். மொத்தம் 1700 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அண்ணாமலை இரவு நேரங்களில் ஓய்வெடுக்க பிரம்மாண்ட சொகுசு வாகனமும் பின்னே செல்ல இருக்கிறது.
இப்பயணத்தின் போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி சொல்வோம் எனவும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில் அண்ணாமலையின் ராமேஸ்வரம் யாத்திரை தொடக்க நிகழ்வில் எந்தெந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரியாமல் பெரும் குழப்பமும் நிலவுகிறது. பாதயாத்திரையின் முதல் நாள் நிகழ்விலேயே குழப்பம் ஏற்பட்டிருப்பதையும் பாஜகவினர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலைக்கு எதிரும் புதிருமாக இருக்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று அண்ணாமலையின் யாத்திரை வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்ததாக தமது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தம்; வானதி சீனிவாசன், கட்சியின் அகில இந்திய பொறுப்பில் இருப்பதுடன் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதால் தனியே சுதந்திரமாக செயல்படுகிறார் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து இருவரும் அண்மையில் கோவையில் சந்தித்து அக்காவும் தம்பியும் இணைந்து பாஜகவை வலுப்படுத்துவோம்; எங்களுக்குள் கருத்து வேற்றுமைகளே இல்லை என பிரகடனம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலையின் யாத்திரை வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் வானதி சீனிவாசன் பிரார்த்தனை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications