தமிழகத்தில் மேலும் 106 கோயில்களில் அன்னதானம், 1006 கோயில்களுக்கு குடமுழுக்கு: முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 106 கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்தார். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு:
இறையன்பர்களின் வசதிகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.
நாள்தோறும் அன்னதானம்
2002ம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட திருக்கோயில்களில் அன்ன தானம் வழங்கும் திட்டம் தற்போது 518 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், ஆன்றோர்கள், சான்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 13.9.2012 அன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் 106 கோயில்கள்
திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும் இத்திட்டம், நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
1006 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்
இந்து சமய திருக்கோயில்களை ஆகம விதியின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 5351 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் மேலும் 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். இதற்கென அரசு மானியமாக 6 கோடி ரூபாய் வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி.கள் வாழும் பகுதியில் கோயில் பராமரிப்பு
இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து இருப்பதை அறிந்த எனது தலைமையிலான அரசு, கடந்த 3 ஆண்டுகளில், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள 1,630 திருக்கோயில்களை சீரமைக்க, ஒரு திருக்கோயிலுக்கு 50,000 ரூபாய் வீதம் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி, அதன் மூலம் அத்திருக் கோயில்கள் பயனடைந் துள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் ரூ.5 கோடியே 3 லட்சம் நிதியுதவி செய்யப்படும்.
அன்னதான கூடம்
அன்னதானம் அருந்தும் பக்தர்கள் வசதிக்கென அன்ன தானக் கூடம் இல்லாத திருக் கோயில்களில் சமையல் அறை யுடன் கூடிய அன்ன தானக் கூடம் அமைத்தல், அங்கு பக்தர்கள் வசதியுடன் அமர்ந்து உணவருந்த தேவையான மேஜை நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தருதல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில், கடந்த 3 ஆண்டு களில் 23 அன்னதானக் கூடங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 29 அன்னதானக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 16 திருக்கோயில் களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.