மத்திய அரசு தடை எதிரொலி- களை இழந்த அந்தியூர் மாட்டு சந்தை!
மத்திய அரசின் தடையால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்படுகிறது.
ஈரோடு: மத்திய அரசின் தடையால் அந்தியூர் மாட்டுச்சந்தை வழக்கமான உற்சாகமின்றி களையிழந்து காணப்படுகிறது. மற்ற மாநில வியாபாரிகளும் கூடும் அந்தியூர் மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
உற்சாகமிழந்த அந்தியூர்
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் புகழ்பெற்ற அந்தியூர் மாட்டுச்சந்தை வழக்கமான உற்சாகமின்றி காணப்படுகிறது.
ஞாயிற்று கிழமைகளில் கூடும் சந்தை
அந்தியூர் மாட்டு சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும். கேரள, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, பவானி, அத்தாணி மற்றும் பர்கூர் மலைப்பகுதியிலிருந்தும் மாடுகள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
குறைந்தளவு மாடுகள்
மாடுகள் வாங்கவும், விற்கவும் மாவடத்தின் பல இடங்களில் இருந்தும், கர்நாடகா, கேரள வியாபாரிகளும் குவிவது வழக்கம். ஆனால் மத்தியரசின் கெடுபிடியால் மாட்டுச்சந்தைக்கு மிகவும் குறைந்தளவு மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆர்வம் காட்டாது வியாபாரிகள்
அதேபோல் அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. மத்திய அரசின் தடையால் மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.