தேர்தல் களத்தில் கூடங்குளம் போராட்டக் குழு - உதயக்குமார், பாதிரியார் ஜேசுராஜ், புஷ்பராயன் போட்டி?
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை நம்பி, அவர்களது வாக்கு வங்கியை நம்பி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூடங்களும் போராட்டக் குழு தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும், நெல்லை தொகுதியில் பாதிரியார் ஜேசுராஜூம், தூத்துக்குடியில் அமைப்பின் தலைவர் புஷ்பராயனும்,போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
ஆம் ஆத்மியுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது கூடங்குளம் போராட்டக் குழு.
கூடங்குளத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்து நாடாளும்ன்றத் தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே இடிந்தகரையில் போராட்டம் நடந்தபோது உதயகுமாரை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனும் இடிந்தகரை வந்து போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆம் ஆத்மி கட்சியும் உறுதி அளித்துள்ளது.
இதையடுத்து அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீனவர்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓட்டுகளை குறி வைத்து கன்னியாகுமரி தொகுதியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும்,நெல்லை தொகுதியில் பாதிரியார் ஜேசுராஜூம்,தூத்துக்குடியில் அமைப்பின் தலைவர் புஷ்பராயனும்,போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து உதயகுமார் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சியுடன்கூட்டணி அமைத்து போட்டியிடுவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டுக்கு வரும்போது கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
கூடங்குளம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் புஷ்பராயன் கூறுகையில், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களது நிலைப்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாங்களே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதன் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்றால் கட்சிக்கு தமிழ் பெயர் சூட்டுவது உள்பட இலங்கை தமிழர் உரிமைக்கு குரல்கொடுப்பது வரை பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம்.
இது தொடர்பாக எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
தேர்தலுக்கு இன்னும் நிறைய காலஅவகாசம் உள்ளது.எனவே எங்கள் நிலைபாட்டை இப்போதே அறிவிக்க மாட்டோம். மக்களுடன் கலந்து ஆலோசித்து எங்கள்முடிவை அறிவிப்போம் என்றார் அவர்.