40 இடங்களில் போட்டியிடப் போகும் அ.பா.கா.கா.. வாக்காளர்களே உஷார்!
நெல்லை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் மு. சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது
"தமிழகத்தில் இளைஞர்கள் சக்தியை ஒன்று திரட்ட வேண்டும் என்பதற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.
ஏற்கெனவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலியில் சுயேச்சையாகப் போட்டியிட்டோம். இப்போது, எங்களது கட்சியில் சுமார் 2.50 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே, இளைர்களை நம்பி, இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றோம்.
அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்ய நேர்காணல் திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் உள்ள கிங்ஸ் ராயல் பேலஸில் இன்று முதல் நடைபெறும்" என்றார்.
தமிழகத்தில், அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் போன்ற பெரும் கட்சிகளே, தேர்தலில் கூட்டணி வேண்டி தட்டுத்தடுமாறி வரும் நிலையில், 40 தொகுதிகளிலும், தனித்தே போட்டி என அகில பாரத காமராஜர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.