ஜெ. சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா உண்மைகள்?
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை முன்வந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த டிசம்பரில் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்,பார்த்திபன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு தலைமை நீதிபதி அமர்விற்கு ஒத்திவைத்திருந்தார்.
பிப்ரவரியில் விசாரணை
இதையடுத்து இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய,மாநில அரசுகள் காலஅவகாசம் கோரியது. இதையடுத்து 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
சீலிடப்பட்ட உரை
வழக்கு விசாரணை மீண்டும் வரும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரம் சீலிடப்பட்ட கவரில் இந்த விவரம் சமர்ப்பிக்கப்படும். இதை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும்.
மறுத்த அப்பல்லோ
ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தப்பட்ட உறவினர்களுக்கு மட்டுமே சிகிச்சை விவரத்தை அளிக்க முடியும் என முதலில் அப்பல்லோ கூறியது. இதுகுறித்து ஜோசப்பிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. அவர் தரப்போ, தான் ரத்தம் சம்மந்தம் கிடையாது என்றும், அதேநேரம், தமிழகத்தின் குடிமகன் என்றும், அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். எனவே கோர்ட் உத்தரவின்பேரில் சீலிடப்பட்ட உரையில் விவரத்தை தாக்கல் செய்ய அப்பல்லோ முன்வந்துள்ளது.
அப்படியென்ன சிகிச்சை?
முதல் முறையாக அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறைகள் வெளியுலகிற்கு வர உள்ளது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அதேநேரம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலகட்டத்தில், அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை, மருத்துவ விவரத்தை பத்திரிகைகளுக்கு வெளியிட்டது. அப்படியிருக்கும், நிலையில் இதில் சீலிடப்பட்ட கவரில் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிராகும்.