ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களுக்கு விடை என்ன? அப்பல்லோ டாக்டர்கள் பேட்டியின் ஹைலைட்ஸ் இவ்வளவுதான்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரி சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து அப்பல்லோவில் பணியாற்றும் மருத்துவர்களும், சிகிச்சையளித்த சிறப்பு டாக்டர் ரிச்சர்ட் பியலும் இன்று பேட்டியளித்தனர்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் பிரஸ் மீட் செய்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
மருத்துவர்கள் கூறியதன் முக்கிய அம்சங்கள் இவைதான்:
*ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்படும்போதே, செப்சிஸ் எனப்படும் உடல் பாகங்கள் முழுக்க பரவக்கூடிய நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தாமதமாக மருத்துவமனை அழைத்துவரப்பட்டாரா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது.
*உடல் சோர்வு, காய்ச்சல் பிரச்சினையால்தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். சோதனையின்போது உடலில் நோய் தொற்று பரவியிருந்ததை கவனித்தோம்.
*ஐசியூ சிகிச்சையில், இருப்பவரின் புகைப்படத்தை வெளியிடுவது அறமாகாது.
* தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதாவின் கை விரல் ரேகை பெறப்படும்போது அவர் சுய நினைவோடுதான் இருந்தார்.
* டிசம்பர் 5ம் தேதி மாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால்தான் ஜெயலலிதா மரணமடைந்தார். கட்டுக்கடங்காத நீரிழிவு, ரத்த கொதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை.
*டிசம்பர் 5ம் தேதிதான் ஜெயலலிதா மரணமடைந்தார். முன்கூட்டியே மரணமடைந்ததாக வெளியான தகவல்கள் வதந்தி.
*ஜெயலலிதாவை சந்திக்க உறவினர்களை அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது. மருத்துவ கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்போம்.
* ஜெயலலிதாவின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டது. இப்படி உடலை பதப்படுத்துவது என்பது பிரபலங்களின் மரணங்களின்போது சகஜம். எம்.ஜி.ஆருக்கும் இப்படி செய்யப்பட்டது.
*ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவருடன் டாக்டர் ரமேஷ் இருந்தார்.
*நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. எனவே நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சிசிடிவி காமிரா காட்சிகளை வெளியிட இயலாது.
*மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அரசுதான் இந்த பிரஸ்மீட்டை நடத்த கேட்டுக்கொண்டது.
* ஜெயலலிதா உடலில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை.
*அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்து உபகரணங்களும் இருந்ததால் ஜெயலலிதாவை லண்டன் அழைத்து சென்று சிகிச்சையளிக்க விரும்பவில்லை. சுய நினைவோடு இருந்தபோது, ஜெயலலிதாவும் அதை விரும்பவில்லை.
* ஜெயலலிதாவுக்கு டிவியில் எந்த நிகழ்ச்சி பிடிக்கும், உணவு எதுபிடிக்கும் என்பது குறித்து லண்டன் டாக்டர் பியல் கேட்டறிநத்ார். அவரது குடும்பம், குழந்தைகள் குறித்து ஜெயலலிதாவும் கேட்டறிந்தார். பரஸ்பரம் இருவரும் பேசிக்கொண்டனர்.
*ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து, பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்ற சென்னை ஹைகோர்ட்டின் கருத்து தேவையற்றது.
*ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு ரூ.5.4 கோடி வரையில் ஆகியிருக்கும். குடும்பத்தாரிடம் பில் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு பிரஸ் மீட்டில் தெரிவிக்கப்பட்டது. தெரிந்த விஷயங்களையே டாக்டர்கள் கூறினரே தவிர, போட்டோ, வீடியோ உட்பட ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது வெளியிடுங்கள் என நிருபர்கள் கேட்டபோது அதை மட்டும் வெளியிட முடியாது என மறுத்துவிட்டனர்.