அரக்கோணம் பள்ளி மாணவிகள் தற்கொலை.. தலைமை ஆசிரியை உள்பட இருவர் சஸ்பெண்ட்!
அரக்கோணம் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை விவகாரத்தில் தலைமை ஆசிரியை, ஆசிரியை ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Recommended Video
வேலூர்: ஆசிரியை திட்டியதால் அரக்கோணம் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், பணப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதில், பருவத் தேர்வில் மாணவிகள் சரியாக மதிப்பெண் எடுக்காததால் ஆசிரியர்கள் திட்டியது தான் காரணம் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவிகள் 4 பேரும் பாடத்தை கவனிக்காமல், தமிழ் ஆசிரியை உள்பட 3 ஆசிரியைகளை சித்தரித்து கானா பாட்டு எழுதியதாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியை அவர்கள் 4 பேரும் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பறையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என ஆசிரியை கூறியதால் பயந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.