முதல்வர் ஈபிஎஸ் அணிக்கு ஆதரவளித்த அறந்தாங்கி எம்.எல்.ஏ திடீர் பல்டி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவளித்து வந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, இன்று திடீரென 'ஆதரவில்லை' என்றும் 'நான் எந்த அணியிலும் இல்லை' என்றும் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவளித்து வந்த அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, இப்போது அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் இல்லை என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்தவர் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவைப் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று நீக்கி, அறிவிப்பு வெளியிட்டார்.
அவருக்குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி, மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு தாவப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வர் ஈபிஎஸ் அரசுக்கு நெருக்கடி மேலும் முற்றியுள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி கூறும்போது, " அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை. சசிகலா, தினகரனை விலக்கிவிட்டு ஆட்சியை நடத்த முடியாது.
சட்டப்பூர்வமாக அனைவரும் ஒன்றிணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த சசிகலாவை விலக்க, ஏன் முயற்சிக்கிறார்கள்? எம்.எல்.ஏக்களை கலந்தாலோசிக்காமல், 6 பேர் மட்டுமே கூடி முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.