பேரறிவாளானுக்கு பரோல்... அமைச்சர் சி.வி. சண்முகத்தை சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை
சிறையில் உடல்நலக்குறைவால் துன்பப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு பரோல் தர வேண்டும் என அற்புதம்மாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து, மகனை பரோலில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இவருக்கு அண்மைகாலமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் அமைச்சர் சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து, பேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
அதனையடுத்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், 'நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா அரசுதான் பரோல் வழங்கியது. அதுபோல் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் கொடுக்க வேண்டும்' என கேட்டார். ஆனால் அந்தக் கோரிக்கை கடந்த ஒருமாத காலமாக பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் சி.வி சண்முகத்தை அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளனுக்கு பரோல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளானுக்கு பரோல் கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.