ஆறுகுட்டி தானா வந்தார்... தானாகவே போயிட்டார் - ஓபிஎஸ் ஓப்பன் டாக்
ஆறுகுட்டி எம்எல்ஏ எங்கள் அணிக்கு தானாகவே வந்தார். தானாகவே விலகிச் சென்றுள்ளார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி எங்கள் அணிக்கு தானாகவே வந்தார். இப்போது தானாகவே விலகி சென்று விட்டார் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். அதிமுக அணி இரண்டாக பிளவு பட்டது. ஓபிஎஸ் அணிக்கு முதன் முதலாக வந்து ஓடி வந்து ஆதரவு அளித்தார் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி.
தொடர்ந்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வந்து ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தனர். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டன. ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் அணியில் தான் ஒதுங்கப்படுவதாகவும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் ஆறுகுட்டி எம்எல்ஏ சில நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
ஆறுகுட்டி அணி மாறப்போவதாக செய்திகள் வெளியாகின. நேற்று செய்தியாளரிடம் பேசிய ஆறுகுட்டி எம்எல்ஏ,
யாரை நம்பியும் அரசியலுக்கு வரவில்லை. தொகுதி மக்களை நம்பி மட்டுமே அரசியலுக்கு வந்தேன் என்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். அதை செய்யாமல் நான் சும்மா இருக்க முடியாது.
என்னுடைய நிலை மாற உள்ளது. நான் மட்டும் தனியாக போவேனா, எல்லாரும் சேர்ந்து போவார்களா என்பது தெரியாது என்றும் கூறினார். ஓபிஎஸ் மீது வருத்தம் இருந்தது விலகி விட்டேன் என்றும் கூறினார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வத்திடம், ஆறுகுட்டி எம்எல்ஏவின் கருத்து பற்றி விளக்கம் அளித்தார். 'ஆறுகுட்டி எம் எல் ஏ எங்கள் அணிக்கு தானகவே ஆதரவு அளித்தார். தற்போது தானகவே விலகிச் சென்றுள்ளார்' என்று தெரிவித்தார்.