ஏ.டி.எம். கட்டணத்தை ரத்து செய்ய வைக்க ஃபேஸ்புக்கில் மக்கள் 'பலே' திட்டம்
சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ.டி.எம். கட்டணத்தை ரத்து செய்ய வைக்க மக்கள் ஃபேஸ்புக்கில் புதிய திட்டங்களை வகுத்துள்ளனர்.
ஏ.டி.எம்.மில் மாதம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 6 மாநகரங்களில் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் ஃபேஸ்புக்கில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏ.டி.எம். எந்திரங்கள் வைத்திருப்பதே மக்களின் வசதிக்காக தான். அதிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்பது என்ன நியாயம். நாம் அனைவரும் சிரமம் பார்க்காமல் வங்கிக்கு சென்று 100,100 ரூபாயாக பெற்று வருவோம். இவ்வாறு சென்று வங்கியில் கூட்டம் கூடினால் தான் வங்கி ஊழியர்களே இந்த கட்டணத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்துவார்கள்.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கக் கூடாது என்றால் சம்பளத்தை ரொக்கமாக கையில் கொடுக்க சொல்லுங்க. அவர்கள் வங்கியில் சம்பளத்தை டெபாசிட் செய்வதால் தானே நாமும் ஏ.டி.எம். போக வேண்டி உள்ளது.
இந்த விஷயத்தை நாம் சீரியஸாக எடுக்கவில்லை என்றால் நம் தலையில் மிளகாய் அரைப்பது தொடரும் என்று பேசப்படுகிறது.