காவிரி பாதுகாப்புக் குழுவினர் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது: பழ.நெடுமாறன் சாடல்
காவிரி பாதுகாப்புக் குழுவினர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று பழ.நெடுமாறன் சாடியிருக்கிறார்.
சென்னை: காவிரி பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் வாங்கலில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் மணல் குவாரியை எதிர்த்து அங்குள்ள மண்டபம் ஒன்றில் காவிரி பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த முகிலன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் டிச. 13-ஆம் தேதி நடந்துள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறும்போது மண்டபத்தின் முன்னால் மணல் கொள்ளையர்களின் கையாட்கள் கூடி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை. கூட்டம் முடிந்து முகிலனும் மற்றும் அவரது தோழர்களும் சென்ற காரை வழிமறித்ததுடன் அவரைக் காரிலிருந்து வெளியே இழுத்து வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடும் முகிலன், விசுவநாதன் போன்றோரின் உயிருக்குத் தொடர்ந்து ஆபத்து உள்ளது. எனவே, உடனடியாக காலிக் கும்பலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என பழ.நெடுமாறன் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications