விவசாயிகளின் கோரிக்கையை 2 மாதத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்... அய்யாகண்ணு
விவசாயிகளின் கோரிக்கைகளை இன்னும் 2 மாதங்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை இன்னும் 2 மாதத்துக்குள் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அவற்றை செய்ய தவறினால் மீண்டும் போராடுவோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.
சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
முதல்வர் மறுப்பு
இதைத் தொடர்ந்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு முதல்வரை சந்திக்க தலைமை செயலகத்துக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டாரர்.
பயிர் கடன் தள்ளுபடி
இந்நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வரை அவரது இல்லத்தில் அய்யாகண்ணு சந்தித்தார். எனினும் அவர்களது கோரிக்கைகளை இதுவரை நிறைவேறவில்லை. இதனால் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நேற்று சேப்பாக்கத்தில் குவிந்தனர். அங்கு தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.
கோரிக்கைகள்
பயிர் கடன் தள்ளுபடி, பிளாஸ்டிக் அரிசி, முட்டை ஆகியவற்றை தடுக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையில் 5 அல்லது 10 சதவீதம் விவசாயிகள் மீது காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முதல்வருடன் சந்திப்பு
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச அய்யாகண்ணு உள்ளிட்ட 5 விவசாயிகள் இன்று தலைமை செயலகத்துக்கு சென்றனர். இந்த சந்திப்புக்கு பின்னர்தான் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.
என்ன பேசினார் முதல்வர்?
விவசாயிகளுடன் கலந்து பேசிய பின்னர் அய்யாகண்ணு தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து யோசனை செய்து முடிவு அறிவிப்பதாக முதல்வரும், நிதி அமைச்சரும் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.50 கோடி ஏமாற்றப்பட்ட விவசாயிகளின் பணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
போராட்டம் வாபஸ்
அத்திகடவு- அவினாசி திட்டத்துக்கும் உடனடியாக நிதி ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் அரிசையை தமிழகத்துக்குள் அனுமதிக்க விடமாட்டோம் என்று முதல்வரும், நிதி அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர். மேலும் நகைகள் மீது பயிர்க் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் நகைகள் ஏலமிடப்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே முதல்வர் உறுதி அளித்ததை ஏற்று எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். ஒரு வேளை 2 மாதங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராடுவோம். போராட்டமே எங்கள் வாழ்க்கையாகிவிட்டதே என்ன செய்வது என்றார் அய்யாகண்ணு.
வாலாஜா சாலை மூடல்
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சேப்பாக்கம் நோக்கி படையெடுத்து வந்ததால் மேலும் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இளைஞர்களின் வருகையை தடுக்க வாலாஜா சாலை மூடப்பட்டது.