நகைகளை ஏலம் விடாமல் தடுப்பதாக முதல்வர் உறுதி... போராட்டம் வாபஸ் - அய்யாக்கண்ணு
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை : வறட்சி நிவாரணம், ஓய்வூதியம் குறித்த தங்களின் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக முதல்வருடன் பேசிய அய்யாக்கண்ணு கூறியுள்ளார். போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார்.விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சருடன் அய்யாக்கண்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதல்வர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கடன் தள்ளுபடி,ஓய்வூதியம், கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
வங்கிககளில் வைத்த நகைகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என்று கூறினோம். அதை முதல்வர் பரிசீலிப்பதாக கூறினார்.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றும், அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளுவதற்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் இது பற்றி தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் 41 நாள்களுக்கு போராட்டம் நடத்தினர்.
அதே வலியுறுத்தி சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். முதல்வர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.