திமுகவுடன் சமரசமாகி விட்டார் மு.க.அழகிரி..?
சென்னை: திமுக தலைமையுடன் ஏற்பட்ட கடும் மோதலின் விளைவாக கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது திமுக தலைமையுடன் சமசரமாசிகியுள்ளதாக கட்சி வட்டாரத்திலிருந்து கசியும் செய்திகள் கூறுகின்றன.
மு.க.அழகிரி பிறந்த நாளன்று மதுரையில் கூடிய கூட்டம், அவர் மதுரைக்குப் போனபோது கிடைத்த பிரமாண்ட வரவேற்பு, அவரது ஆதரவாளர்களின் தீவிர விசுவாசம் ஆகியவற்றைப் பா்ர்த்து திமுக தலைமையே சற்று ஆடிப் போனதாகவும் இந்த செய்திகள் கூறுகின்றன.
இதையடுத்து, லோக்சபா தேர்தல் நேரத்தில் அழகிரியை பகைத்துக் கொள்ள வேண்டாம், அவரது கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றப் பார்க்கலாம், அவரைத் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்றும் சில தலைவர்கள் திமுக தலைமையுடன் பேசியதாகவும், அதன் அடிப்படையில் தற்போது சமரச முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பரபரப்பு நீக்கம்
மதுரையில் நடந்த போஸ்டர் யுத்தத்தைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் பலர் அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்தார் அழகிரி. தலைமையை நேரில் சந்தித்து அவர் பேசினார். ஆனால் பலன் இல்லை. கடைசியில் அவரே கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அழகிரி போட்ட சவால்
அதன் பின்னர் நான் திமுகவின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம், மதுரையில் எனது பிறந்த நாளுக்கு அடுத்த நாள் முடிவை அறிவிப்பேன் என்றெல்லாம் பேசினார்.
கப்சிப் அழகிரி
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அழகிரி பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் மதுரையில் திருவிழா போல நடத்தினர். பால்குடம் ஏந்தி, காவடி எடுக்காத குறைதான்.. மற்றபடி அத்தனை அமர்க்களங்களும் மதுரையில் நடந்தேறின. ஆனால் அழகிரிதான் ஜனவரி 30ம் தேதியுடன் அமைதியாகி விட்டார்.
ஏன் பேசவில்லை
அழகிரி பேசாமல் அமைதியாக இருப்பதற்கு அவருக்கும், கட்சித் தலைமைக்கும் சுமூக நிலையை ஏற்படுத்துவதற்காக நடந்து வரும் அமைதிப் பேச்சுக்கள்தான் என்று சொல்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள்.
சென்னையில் அழகிரி
அழகிரி நேற்று சென்னைக்கு வந்தார். தன் பிறந்த நாள் விழாவின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, காலை உடைத்துக்கொண்ட, சென்னை, ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த, கருணாகரன் வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மதுரை திரும்பினார்.
நான் பேச மாட்டேன்
சென்னையில் அழகிரியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். வழக்கமாக செய்தியார்களிடம் சரியாகவே பேச மாட்டார் அழகிரி. ஆனால் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சற்று இயல்பாக பேசி வந்தார். ஆனால் நேற்று முதல் மீண்டும் பழைய அழகிரியாக மாறி விட்டார். பேச மாட்டேன் என்று கூறி விட்டா்ர்.
பேசினால் சர்ச்சை வரும்
இருப்பினும் விடாப்பிடியாக செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டபோது, 10 நாட்ளாக நான் நிறையப் பேசி விட்டேன். உங்களுக்குத் தேவையானதை எல்லாம் சொன்னேன். இப்போது பேச மாட்டேன். பேசினால் சர்ச்சை வரும் என்றார்.
எப்படி சர்ச்சை வரும்
அழகிரிதான் திமுகவிலேயே இல்லையே, நீக்கி விட்டார்களே, பிறகு எப்படி அவர் பேசினால் திமுகவில் சர்ச்சை வரும் என்கிறார் என்று புரியாமல் கேள்வியாளர்கள்தான் குழம்பிப் போயினர்.
ரகசிய முயற்சிகள்
தற்போது அழகிரியை சமாதானப்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்து சில மூத்த தலைவர்கள் கட்சித் தலைமையுடன் பேசி வருகிறார்களாம். அழகிரியின் முக்கியக் கோரிக்கை, நீக்கப்பட்ட அவரது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், பொறுப்பு தர வேண்டும் என்பதுதான். இதைச் செய்தால் அழகிரி மீண்டும் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பார் என்று தலைமைக்குச் சொல்லி வருகிறார்களாம்.
ஆப் செய்து விட்டனர்
மொத்தத்தில் கோபமாக இருந்த அழகிரியை தற்காலிகமாக கட்சித் தலைமை ஆப் செய்து வைத்திருப்பதாகவே பேசிக் கொள்கிறார்கள். விரைவில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.