சாணக்கியரின் மகனும் சாணக்கியர்தான் என்பதை நிரூபிப்பாரா அழகிரி.. ?
சென்னை: அரசியல் சாணக்கியர் என்று பெயர் பெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. இந்திய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமான இடம் இவருக்கு நிச்சயம் உண்டு. இவரது திட்டமிடல், சாதுரியம், நிதானம்.. மிகப் பிரபலமானவை. இவர் எடுக்கும் முடிவுகளுக்கு அப்படி ஒரு அபார சக்தி உண்டு. கிட்டத்தட்ட இவரது பாணியிலேயே அழகிரியும் நிதானம் காட்டி செய்படுவதாக தெரிகிறது.
மு.க.அழகிரி இந்தத் தேர்தல் மூலம் சாதிக்கப் போவது என்ன, அது கருணாநிதியை அசத்துமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே உள்ளனர்.
இதுவரை அழகிரியின் மூவ் என்ன என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் என்னவோ செய்யப் போகிறார், என்னவோ திட்டமிடுகிறார் என்று மட்டும்தான் தெரிகிறது. ஆனால் ஏதோ முக்கிய முடிவுடன் அவர் செயல்படுகிறார் என்பது மட்டும் உறுதி.
புயலைக் கிளப்பாமல்.. அமைதி
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் பெரும் புயலைக் கிளப்புவார் என்று பார்த்தால் அப்படியே அமைதியாகி விட்டார் அழகிரி. இது முதல் ஆச்சரியம்.
கட்சியின் மூத்தவர்களுடன் சந்திப்பு
ஆனால் கட்சியின் ஆரம்ப கால தொண்டர்கள், மூத்த தலைவர்களை அடுத்தடுத்து அவர் சந்தித்த விதம், அவர்களைத் தேடிப் போய் பார்த்துப் பேசிய விதம், நலம் விசாரித்த குணம், திமுகவினர் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு
அத்தோடு நிற்காத அழகிரி, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், விமானத்தில் வைத்து வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்து திமுகவினரையே திணறடித்தார்.
புரிஞ்சுக்க முடியலையே
எந்தத் திட்டத்தையும் சொல்லாமல், ஆனால் அடுத்தடுத்து அழகிரி செய்த இந்த காரியங்களால் அவரைப் புரிஞ்சுக்கவே முடியலையே என்று அனைவரும் குழம்பிப் போய் நிற்கின்றனர். ஆனால் அவரது அழகிரியின் உள் மனதை அறிந்த அவரது ஆதரவாளர்களோ ரகசியப் புன்னகை பூக்கிறார்கள்.
மறுபக்கம் ஆதாயம் தேட முயலும் காங்கிரஸ்
ஆனால் மறுபக்கம் அழகிரியை வைத்து ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற முயற்சியில் காங்கிரஸும் இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டம்தான் மன்மோகன் சிங்கைப் பார்க்க அழகிரிக்கு அனுமதி கொடுத்தது என்கிறார்கள். இதை வைத்து அழகிரியுடன் தாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டி திமுகவை எரிச்சலுக்குள்ளாவதுதான் என்கிறார்கள்.
மொத்தத்தில் அழகிரி மிகப் பெரிய மர்ம தலைவராக மாறி வருகிறார். கருணாநிதி பாணியில் அவர் அசரடிப்பாரா அல்லது அம்பேல் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.