ராமதாஸ் மீது பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அதிருப்தி.. வாக்குப்பதிவில் எதிரொலிக்க வாய்ப்பு
சென்னை: பிற்படுத்தப்பட்ட ஜாதி கூட்டமைப்பினர், பாமகவுக்கு எதிராக அணி திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர் தவிர்த்த பிற பிறப்படுத்தப்பட்ட ஜாதியினரை பாமக வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது என்ற ஆதங்கமே இதற்கு காரணமாகும்.
தலித் இளைஞர்கள் பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியின பெண்களுடன், கலப்பு திருமணம் செய்வதை முன்வைத்து, 'நாடக காதலை எதிர்ப்போம்..' என்று கூறி, பாமக சார்பில், வெள்ளாளர், கவுர நாயுடு, முதலியார், உடையார், கிராமணி உள்ளிட்ட பிற நடு வர்க்க ஜாதியினர் மத்தியில் தீவிர பிரசாரம் செய்யப்பட்டது.

கடந்த மக்களவை தேர்தலின்போது, இந்த ஜாதியினர் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் எம்.பியாகிவிட்ட நிலையிலும்கூட, இப்போதுவரை, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்புமணி முதல்வராவதற்கு பிற்படுத்தப்பட்ட ஜாதி கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது என்று ராமதாஸ் கூறிவருவதால் இந்த ஜாதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசியல் ஆதாயத்திற்கு தங்களை பயன்படுத்துவதாக ராமதாஸை குறைகூறும் இவர்கள், பாமகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்துள்ளனராம்.
சட்டசபை தேர்தலிலும், தங்கள் ஜாதியினருக்கு முக்கியத்துவம் தராமல், வன்னியர்களுக்கு மட்டுமே பாமகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி ரகசிய கூட்டங்கள் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications