தாஜ்மஹால் என்றதும் மும்தாஜ் ஞாபகம் வருகிறது, ஆனால் கட்டிக் கொடுத்தவர்களை மறந்துட்டோமே... சரத் குமார்
பெண்ணாடம்: தாஜ்மகால் என்றால் ஷாஜகான், மும்தாஜ் பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதை கலை நயத்துடன் கட்டிக் கொடுத்தவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை வளரச் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பெண்ணாடத்தில் தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பொன்வேல்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலர் கமலக்கண்ணன் வரவேற்றார். அமைச்சர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கின்றேன். அவர்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, பஸ் வசதி, ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு போன்ற அவர்களின் பல்வேறு பிரச்சினைகள் மனுவாக என்னிடம் கொடுத்தார்கள் அவை நியாயமானதாக இருந்தது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
திட்டக்குடி வெலிங்டன் நீர் தேக்கத்தை தூர்வார தமிழக முதல்வரிடம் மனு அளிப்பேன். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் பிரதமர் மோடி குப்பைகளை கொட்டக்கூடாது என சட்டமாக இயற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் குப்பையை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது, இதை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
மாற்றங்கள் தேவை:
ஏழ்மையான மக்கள் வசிக்கும் இந்தியாவில் அபராதம் விதித்தால் அதை செலுத்தும் பொருளாதார நிலையில் மக்கள் இல்லை. மோடி நிறைய செய்ய வேண்டும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என விரும்புகின்றார். இளைஞர்களை வேலைவாய்ப்பிலும் கல்வி பெறுவதிலும் எப்படி வழி நடத்துகிறோம் என்பது தான் முக்கியம். மோடியின் திறமையை நான் வரவேற்கிறேன்.
மதசார்பற்ற ஆட்சியை நடத்த மோடி முன் வரவேண்டும், மத்திய அரசின் நிலையை கண்டு சிறுபான்மையினர் பயந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது ஒரு நல்ல ஆட்சிதான் நடக்கிறது. பால் விலை, மின்கட்டண உயர்வு குறித்து சில அரசியல் கட்சிகள் அரசியலாக பேசுகின்றனர். பால் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
60 ஆண்டுகளாக பல்வேறு இலவச திட்டங்களை பழக்கப்படுத்தியுள்ளோம் இதில் ஏழ்மையை அகற்றுவதற்கு உதவிக்கரம் நீட்டுவது, இலவச திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் ஆகிவிட்டது. தேசிய கொடியின் வண்ணத்தை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்பதை மோடி தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறையை போக்க கூடங்குளத்தில் உற்பத்தி ஆகும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும், பொது மக்களை அச்சுறுத்தக்கூடிய நிலையில் கூடங்குளம் மின் நிலையம் இல்லை. மத்திய அரசு டாக்டர் அம்பேத்கார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோர் படங்களை ரூபாய் நோட்டில் அச்சடிக்க வேண்டும், 12-வது திட்ட கமிஷன் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் தீட்ட வேண்டும்.
சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்:
மத்திய அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும், இந்தியா முழுவதும் சீனாவில் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். தமிழகத்தின் அருகில் உள்ள இலங்கையில் சீனா கப்பல் கட்டும் தளம் என கூறி போர் கப்பல்களை நிறுத்துவதால் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வரும் தேர்தலில் அ.தி.மு.க. அரசுடன் கூட்டணி தொடரும்.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். அதே போல் நெசவாளர்கள் துணி உற்பத்தி செய்தால் தான் நாம் உடை அணிய முடியும். கட்டட தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொடுத்தால் தான் நாம் வசிக்க முடியும். தாஜ்மகால் என்றால் ஷாஜகான், மும்தாஜ் பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதை கலை நயத்துடன் கட்டிக் கொடுத்தவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை வளரச் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும்.
பிரதமர் மோடி குப்பைகளை அகற்றச் சொல்கிறார். நான் சொல்கிறேன், எந்த இடங்களிலும் குப்பைகளை போடக்கூடாது' என இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.